நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் சொதி குழம்பைத் திருமணத்துக்கு அடுத்த நாள் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை விருந்துக்கு வரும்போது செய்து பரிமாறுவார்கள்.
நெல்லை பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான இதை நீங்களும் செய்து அசத்தலாம். இதை இடியாப்பத்தின் மீது ஊற்றி சாப்பிட்டால்… அமர்க்களமான சுவையில் இருக்கும். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
என்ன தேவை
பாசிப்பருப்பு - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
காலிஃப்ளவர் - அரை பூ
பீன்ஸ் - 50 கிராம்
முருங்கைக்காய் - ஒன்று
பூண்டு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 7
தேங்காய் - ஒன்று
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
எப்படி செய்வது
காய்கறிகள் அனைத்தையும் நீளமாக நறுக்கவும். தேங்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைக்கவும்.
பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவைக்கவும். கடாயில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சூடாக்கி…
நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இரண்டாவது தேங்காய்ப்பாலைச் சேர்த்து, பின்னர் நறுக்கிய காய்களைச் சேர்க்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து, அதனை தொடர்ந்து முதல் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
இன்னொரு கடாயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, காய்கறிக் கலவையில் சேர்த்து, பின்னர் எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். நெல்லை சொதி ரெடி.

