சென்னையில் உணவுப் பிரியர்களுக்கு சைதாப்பேட்டை என்றாலே நாக்கை சப்புக்கொட்டச் செய்யும் 'வடகறி'தான் நினைவுக்கு வரும்.
இட்லி - வடகறி காம்பினேஷன் என்ற முந்தைய வழக்கம் மாறி, இப்போது தோசை - வடகறி, இடியாப்பம் - வடகறி, பூரி - வடகறி, செட் தோசை - வடகறி காம்பினேஷன் சென்னை நகரின் பல உணவகங்களில் வழக்கத்தில் வந்துவிட்டது. இதை நீங்களும் செய்து சுவைக்க… இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
ஐந்து பேருக்கு வடகறி செய்ய…
கடலைப்பருப்பு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - அரை கிலோ (நறுக்கிக்கொள்ளவும்)
புதினா- ஒரு கட்டு (சுத்தம் செய்து ஆய்ந்துகொள்ளவும்)
இஞ்சி - 50 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம்
பூண்டு - 100 கிராம்
ஏலக்காய் - 5
கிராம்பு - 5
பட்டை, லவங்கம் - 25 கிராம்
சோம்பு - 50 கிராம்
மஞ்சள்தூள் - 10 கிராம்
(மல்லி) தனியாத்தூள் - 50 கிராம்
மிளகாய் தூள் - 50 கிராம்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். கனமான சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு விழுதை பக்கோடா போல பொரித்து எடுங்கள். பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, இஞ்சி - பூண்டு பேஸ்ட்டுடன் கலந்துகொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய்விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையை வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். ஒரு கொதிவந்ததும், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்கள். நன்றாகக் கொதித்ததும், பொரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு பகோடாக்களை லேசாக உதிர்த்து சேர்த்து, அரை மணி நேரம் கொதிக்க விடுங்கள். புதினா தூவி, இறக்குங்கள்.

