செல்போனில் வரும் லிங்க் அழுத்தினால் ரூ. 500 தருவதாகக் கூறி பாஜகவினர் மக்களை நூதன முறையில் ஏமாற்றுவதாக நெல்லை திமுக நிர்வாகிகள் இன்று (ஏப்ரல் 13) புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செல்போனில் அனுப்பப்படும் லிங்கை அழுத்தினால் ரூ. 500 தருவதாக பாஜகவினர் மக்களை ஏமாற்றி வருவதாக திமுக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான மைதீன்கான் தலைமையில் திமுக நிர்வாகிகள் இன்று மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மைதீன்கான் பேசுகையில், "நெல்லை மாவட்ட மக்களிடையே தற்போது ஒரு லிங்க் அவரது செல்போன்களுக்கு வருகிறது. அதனை அழுத்தினால் தாமரை சின்னமும், தொடர்ந்து மோடி குறித்து பேசினால் ரூ.500 கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் ஏமாந்து போக நேரிடுவதோடு, அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணமும் திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே நூதன முறையில் மக்களை பாஜகவினர் ஏமாற்றி வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தேர்தல் அலுவலரிடம் இன்று புகார் அளித்தோம்" என்று மைதீன்கான் தெரிவித்தார்.

