மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை (ஏப்ரல் 19) சனிக்கிழமை அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது.
சென்னையில் 3 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி நாளை சனிக்கிழமை அட்டவணையின் படி வழக்கம்போல் சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
காலை 8 - 11, மாலை 5 - 8 ஆகிய மணி நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
காலை 5-8, காலை 11 - மாலை 5, இரவு 8 - 10 ஆகிய மணி நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
இரவு 10 -11 மணி நேரத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

