தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனை இயக்குநர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று(மார்ச் 14) மாலை தவறி விழுந்ததில் நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் உடனடியாக அருகே இருந்த எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தையல்கள் போடப்பட்டு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதற்கிடையே திரிணாமூல் கட்சியின் சமூகவலைதள பக்கங்களில் பகிரப்பட்ட நடு நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழியும் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Mamata Banerjee discharged

அத்துடன் "நமது தலைவர் மம்தா பானர்ஜி பெரிய காயம் அடைந்துள்ளார். தயவுசெய்து அவரை உங்கள் பிரார்த்தனையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றும் பதிவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து பிரதமர் மோடி, மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட நாட்டின் தலைவர்கள் பலரும் அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.
மம்தா பானர்ஜிக்கு உடனடியாக மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவே அவரது விருப்பத்தின் பேரில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையின் இயக்குனர் மணிமோய் பந்தோபாத்யாய், முதல்வர் மம்தா பானர்ஜியை யாரோ பின்னாலிருந்து தள்ளிவிட்டுள்ளனர்" என்று செய்தியாளர்களிடம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் கூறுகையில், "மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை அவரது வீட்டில் யாரோ பின்னால் இருந்த தள்ளியதால் அவர் கீழே விழுந்தது போன்று தெரிகிறது. Mamata Banerjee discharged
அவருக்கு நெற்றி மற்றும் மூக்கில் ஏற்பட்ட கூர்மையான வெட்டுக்காயத்தால் மூளையதிர்ச்சி ஏற்பட்டது. அதிக இரத்தப்போக்கு இருந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 7.30மணியளவில் எங்கள் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முதலில் நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் இருதயநோய் நிபுணரால் மருத்துவ பரிசோதனைகள் அளிக்கப்பட்டன. அவருக்கு நெற்றியில் மூன்று தையல்கள் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டுள்ளது. இசிஜி, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தனது வீட்டிற்கு செல்ல மம்தா பானர்ஜி விரும்பியதை அடுத்து தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
எனினும் வீட்டில் அவருக்கு மருத்துவக்குழுவினரின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை பெறுவார். நாளை அவர் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதுவரை மம்தா கீழே விழுந்தது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
'வசூல் No 1' : உலகளவில் புதிய சாதனை படைத்த 'மஞ்சும்மல் பாய்ஸ்'

