நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார்.
7 மத்திய அமைச்சர்கள் உட்பட மொத்தம் 49 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியோடு முடிவடைந்தது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக உள்ள எல்.முருகனின் பதவிக்காலமும் நேற்றுடன் நிறைவடைந்தது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உட்பட 5 எம்.பி.க்களின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்த பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2ஆவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், எல்.முருகன் உட்பட மொத்தம் 12 பேர் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தங்கார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இன்று எம்.பி.யாக பதவி ஏற்றுள்ள எல்.முருகன் நீலகிரி தொகுதியில் இருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதனை முன்னிட்டு அவர் நேற்று குன்னூர் அருவங்காடு, சேலாஸ், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அங்கு, படுகர் இன மக்களை கவரும் வண்ணம், அவர்களது பாரம்பரிய உடை அணிந்து நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
வள்ளலார் சர்வதேச மையம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: யாரும் வெளியே வர வேண்டாம்!

