மதுரையில் நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா இன்று (ஏப்ரல் 12) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து ஏப்ரல் 19 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20 ஆம் தேதி திக் விஜயமும், 21 ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22 ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது.
ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது.
ஏப்ரல் 24 ஆம் தேதி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வும் நடைபெறுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை பூ பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 27 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைகிறார். மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நகரம் முழுவதும் களைகட்டியுள்ளது.

