Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மீண்டும் உதயநிதி. ஈரோடு சென்ற பின்னணி!

மீண்டும் உதயநிதி. ஈரோடு சென்ற பின்னணி!

Minnambalam 2 years ago

மிழ்நாடு முழுவதும் இந்த மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்… தான் ஏற்கனவே சென்று பிரச்சாரம் செய்த மக்களவைத் தொகுதிகளுக்கு திரும்பச் செல்லவில்லை.

தமிழ்நாடு முழுதும் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்ததால், அவரது நிகழ்ச்சி நிரல் கடும் டைட் ஆகவே அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஈரோடு தொகுதிக்கு மட்டுமே மீண்டும் ஒரு முறை வந்து பிரச்சாரம் செய்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஏப்ரல் 7 ஆம் தேதி ஈரோட்டுக்கு பரப்புரைக்கு சென்ற உதயநிதி, நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி மீண்டும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு சென்று பரப்புரை செய்தார்.

நீலகிரி வேட்பாளரான துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்காக 15 ஆம் தேதி சத்தியமங்கத்தில் பரப்புரை செய்த அமைச்சர் உதயநிதி, கோவை செல்லும் வழியில் மீண்டும் ஈரோடு செல்ல திட்டமிட்டார்.

அதுவும் மொடக்குறிச்சி தொகுதியில் கொடுமுடி ஒன்றியத்தில் பாயின்ட் போடுங்கள் என்று அறிவுறுத்தினார் உதயநிதி.

ஈரோடு தொகுதிக்கு மீண்டும் உதயநிதி பரப்புரைக்கு சென்றதற்கும், கொடுமுடி ஒன்றியத்தில் பரப்புரை பாயின்ட் போட்டதற்கும் முக்கியமான காரணம் இருக்கிறது.

ஏப்ரல் 14 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில், 'சபரீசன் சைலன்ட் ரவுண்ட் -ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்'என்ற செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் முதலமைச்சர் ஸ்டாலினுடைய மாப்பிள்ளை கடந்த வாரம் ஈரோட்டுக்கு வந்து சென்றதைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம்.

இதுபற்றி பேசிய ஈரோடு திமுகவினர்,

"ஈரோடு மக்களவைத் தொகுதியை தன்னுடைய மாநில துணைச் செயலாளரான ஈரோடு பிரகாஷுக்கு கேட்டுப் பெற்றார் உதயநிதி. ஆனால் தேர்தல் களத்தில் ஈரோடு பிரகாஷுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே சில உள்ளடி வேலைகள் நடைபெற்றன. குறிப்பாக மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றிய செயலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை, அமைதியாகிவிட்டார்கள், அவர்கள் அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்கள் என்று தலைமைக்குப் புகார்கள் சென்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுகவின் அப்போதைய துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இதே ஒன்றிய செயலாளர்கள் மீதுதான் தலைமைக்குப் புகார் அனுப்பினார். இதன் விளைவாக திமுக உட்கட்சித் தேர்தலில் அந்த ஒன்றிய செயலாளர்கள் முதல் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் அமைச்சர் முத்துசாமி அவர்களை ஒன்றிய செயலாளர்களாக நீடிக்க வைத்தார்.

இப்படிப்பட்ட பின்னணியில்தான் மீண்டும் இப்போது அதே பகுதியில் உள்ளடி வேலை என தலைமைக்கு புகார் சென்றது. இதன் அடிப்படையில்தான் கோவை செல்லும் வழியில் ஈரோட்டில் முகாமிட்ட சபரீசன் அமைச்சர் முத்துசாமியையும், வேட்பாளர் பிரகாஷையும் அழைத்துப் பேசினார்.

இதற்குப் பிறகுதான் மீண்டும் அமைச்சர் உதயநிதி ஈரோட்டுக்கு சென்றார். தேர்தல் பிரச்சாரத்தில், 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்போது அது மாதிரி ஆகிவிடக் கூடாது. திமுக வேட்பாளர் பிரகாஷ் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்' என்று பேசினார். இதையே அமைச்சர் முத்துசாமியிடமும் தனிப்பட்ட முறையில் வலியுறுத்திவிட்டுச் சென்றார் உதயநிதி.

இதற்கிடையே ஈரோடு மக்களவைத் தொகுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப வேலைகளை துரிதப்படுத்த மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ஜோயலையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் உதயநிதி. குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜோயல் பணியாற்றி தினமும் ஈரோடு பற்றி உதயநிதிக்கு ரிப்போர்ட் அளித்து வருகிறார்" என்கிறார்கள்.

இதுகுறித்து நாம் அமைச்சர் ஈரோடு முத்துசாமி தரப்பிடம் பேசுகையில், "அமைச்சர் முத்துசாமியை பற்றி இங்குள்ள எல்லாருக்கும் தெரியும்., முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியும். அவருக்கு பதவி மீதெல்லாம் நாட்டமில்லை. எம்ஜிஆர் காலத்திலேயே பெரும் பதவிகளைப் பார்த்தவர் அவர். இப்போது விட்டால் கூட அவர் அமெரிக்காவில் மகளோடு செட்டிலாகி விடுவார். ஆனால் அவர் மீது புகார்கள் சொல்வது நியாயமில்லை" என்கிறார்கள்.

-வேந்தன்

ராம நவமி விழா: நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு தரிசனம்!

இறுதிக்கட்ட பரப்புரை : ரோடு ஷோவில் வாக்கு சேகரித்த பன்னீர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam