சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில் நல்வாய்ப்பாக அவர் காயமின்றி தப்பியுள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் பணியாற்றி வருகிறார். அவர் கனிமொழி எம்.பி தலைமையிலான தி.மு.க தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவினருடன் இன்று (பிப்ரவரி 23) வேலூர் சென்று விட்டு மாலை சென்னை திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, ஸ்ரீபெரும்புதூர் அருகே முன்னால் சென்ற கார் மீது மேயர் பிரியா சென்ற கார் மோதி விபத்தில் சிக்கியது. அத்துடன் பின்னால் வந்த லாரியும் மேயர் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மேயரின் கார் கண்ணாடிகள் இருபுறமும் உடைந்து சேதம் அடைந்தது.

எனினும் நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பிய நிலையில், உடனடியாக மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மேயர் பிரியா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். லேசான காயம் அடைந்த மேயர் கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

