Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மியூசிக் அகாடமியில் அனைத்து தரப்பினரும் வேண்டும்" : ரஞ்சனி, காயத்ரி கடிதம்!

"மியூசிக் அகாடமியில் அனைத்து தரப்பினரும் வேண்டும்" : ரஞ்சனி, காயத்ரி கடிதம்!

Minnambalam 2 years ago

'மியூசிக் அகாடமியின் செயற்குழுவில், அனைத்து தரப்பினரையும் இடம் பெறச்செய்து, மாற்றத்தை துவக்குங்கள்' என அகாடமியின் தலைவர் முரளிக்கு, கர்நாடக இசை கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது!

சென்னை தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வு செய்து பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்படுவதாக மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மியூசிக் அகாடமி மாநாட்டை அவர் தலைமை தாங்குகிறார்.

ரஞ்சனி-காயத்ரி எதிர்ப்பு!

ஆனால் டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்பட்டதற்கு சில கர்நாடக இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான ரஞ்சனி-காயத்ரி, இந்த ஆண்டு மாநாட்டை புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இவர்களின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மியூசிக் அகடமி தலைவர் முரளியும் கடிதம் எழுதியிருந்தார். அதில், "ரஞ்சனி - காயத்ரியின் கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்தது. மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தங்களுக்கு பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல" என்று முரளி விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் முரளிக்கு பதில் அளித்து மீண்டும் பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி கடிதம் எழுதியுள்ளனர்.

மகிழ்ச்சியான நாள்!

அதில், "நாங்கள் மார்ச், 20ல் எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்தமைக்கு நன்றி. உங்கள் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிடவில்லை. நாங்கள் நடத்த இருந்த கச்சேரியை திரும்ப பெறுவதற்கான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டோம்.

மேலும் எங்கள் ரசிகர்களுக்கு தெரிவிப்பதற்காகவே எங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டோம். ஆனால், இது சூழலை சமாளிக்க உதவவில்லை என்பதை இப்போது உணர்ந்துள்ளோம்; அதற்காக வருந்துகிறோம்.

விருது வழங்குவதற்கான உங்களின் உரிமையை நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அதேவேளையில் இனப்படுகொலை வெறியர்களையும், இழிவான சொற்பொழிவாளர்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.

நாங்கள் எழுப்பாத கேள்விகளுக்கு பதிலளித்து, உங்களுக்கு வசதியான ஒரு கதையை உருவாக்கி, எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீர்கள். இது தொடர்பான, உங்களின் ஊடக அறிக்கை நேர்மையற்றது. விருது பெற்றவருக்கு ஆதரவாக உங்களின் கருத்து இருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. சிலர் எங்கள் மீது ஜாதி வெறி கூட்டம் என்று முத்திரை குத்துகின்றனர். அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

மியூசிக் அகாடமி நிறுவனத்தை நாங்கள் மதிக்கிறோம். ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து, இசை கலைஞர்கள் உருவாகி, மியூசிக் அகாடமி கட்டடத்தில் ஆதிக்கம் செலுத்துவது எங்களுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மியூசிக் அகாடமி ஆடிட்டோரியம், அனைத்து சமூகங்கள் மற்றும் மத சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் நிரம்பியிருக்கும் நாளை, நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.

இந்த மாற்றம் மேலே இருந்து துவங்க வேண்டும். மியூசிக் அகாடமியின் செயற்குழுவில் இருந்து மாற்றத்தை துவங்குங்கள். சிலரது ராஜினாமாக்களின் வாயிலாக, உடனடியாக இந்த மாற்றத்தை செய்ய முடியும். தயவு செய்து இதை முன்னுதாரணமாக செயல்படுத்துங்கள்" இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இராமானுஜம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

தமிழ்நாட்டில் புதிதாக 20 சுங்கச்சாவடிகள்: எந்தெந்த இடங்களில்?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam