மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், "முதலமைச்சர் ஸ்டாலின் (Stalin) நல்லாட்சி நடைபெற பாராட்டுகள்" என பேசியது ஆளும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
மதுரை மாவட்டம் மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தவெக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இதனை ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன், "1967-க்குப் பிறகு 1977-க்குப் பிறகு 2026-ல் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் ஆட்சி, நல்லாட்சி நடைபெற எங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பேசினார்.
"முதல்வர் தளபதி ஸ்டாலின் நல்லாட்சி நடைபெற" என அமைச்சர் விஸ்வநாதன் பேசியதை கேட்டு பக்கத்தில் நின்றிருந்த தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதே அமைச்சர் விஸ்வநாதனிடம் இதை சுட்டிக் காட்டினர். இதனைத் தொடர்ந்து, "என்ன சொல்லிட்டேன் நான்?" என கேட்டுவிட்டு சுதாரித்துக் கொண்டு "விஜய் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளை சொல்கிறோம்" என திருத்தி பேசினார் அமைச்சர் விஸ்வநாதன்.

