Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ரோடு ஷோ நடத்துவதில் என்ன பிரயோஜனம்?" : எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"ரோடு ஷோ நடத்துவதில் என்ன பிரயோஜனம்?" : எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Minnambalam 2 years ago

ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 10) பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர், "பொள்ளாச்சி நகரமே குலுங்கும் அளவிற்கு இங்கு கூட்டம் கூடியிருக்கிறது. அதிமுக இரண்டு மூன்றாக உடைந்து விட்டது என்று ஸ்டாலின் கூறி வருகிறார். இங்கு வந்து பாருங்கள் அதிமுக கூட்டம் எப்படி இருக்கிறது என்று.

பாஜகவுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும்.

ஃபிளைட்டில் ஏறும் போது ஒரு பேட்டி, இறங்கும் போது ஒரு பேட்டி என பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்க பார்க்கிறார். வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அது தமிழ்நாட்டு மக்களிடத்தில் எடுபடாது.

உழைப்பவர்களுக்குதான் மரியாதை உண்டு. உழைக்கும் கட்சி அதிமுக. எவ்வளவு பேட்டி கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது. பேட்டி கொடுப்பதால் மக்களுக்கு என்ன பயன்?" என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், "மத்தியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன பிரயோஜனம். வருகிறவர்கள் மக்களுக்கு எதாவது திட்டத்தை கொடுத்தால் நன்மை உண்டு. ஆனால், ஏரோபிளேனில் வந்து இறங்குகிறார்கள். நேராக ரோட்டில் போகிறார்கள். அதோடு கதை முடிந்துவிடுகிறது. இதனால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா?" எனவும் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழ்நாட்டில் ரோடு ஷோ நடத்தினர்.

பிரதமர் மோடி கோவையில் மார்ச் 19ஆம் தேதியும், சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதியும் என இருமுறை ரோடுஷோ நடத்தினார்.

இன்று கோவையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில்தான் பொள்ளாச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ரோடுஷோ நடத்தினால் மக்கள் ஓட்டுபோட்டுவிடுவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரணமானவர்களா? இந்த ஏமாற்று வேலை எல்லாம் இங்கு எடுபடாது.

நாங்கள் 30 ஆண்டு காலம் கஷ்டப்பட்டு சிறப்பான ஆட்சியை கொடுத்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியதால் மக்களுக்கு நிறைய நன்மை கிடைத்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் யார் யாரோ வந்து ஏதேதோ பேசி மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்" என்று கூறினார்.

பிரியா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam