Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சஞ்சு சாம்சன் மிரட்டல் பேட்டிங். அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சஞ்சு சாம்சன் மிரட்டல் பேட்டிங். அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

Minnambalam 2 years ago

2024 ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

இந்தியாவின் 2 இளம் விக்கெட் கீப்பர்கள் தலைமையிலான அணிகள் மோதிக்கொண்ட இப்போட்டி, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆட்டத்தை துவங்கினாலும், பவர்-பிளேவுக்குள்ளேயே தங்கள் விக்கெட்களை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கும், பட்லர் 11 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் பொறுப்பாக விளையாடி, அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.

இந்த ஜோடி 3வது விக்கெட்டிற்கு 93 ரன்கள் சேர்த்தபோது, ரியான் பராக் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால், மறுமுனையில் கடைசி வரை தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சஞ்சு சாம்சன் 82 ரன்கள் குவிக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணிக்காக நவீன் உல்-ஹக் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு, துவக்கமே பெரும் பின்னடைவாக அமைந்தது. குவின்டன் டி காக் (4), தேவ்தத் படிக்கல் (0), ஆயுஷ் பதோனி (1) என மூவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.

பின் இணைந்த கே.எல்.ராகுல் - தீபக் ஹூடா, சற்று நேரத்திற்கு அணியின் விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தினர். ஆனால், ஹூடாவும் 26 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரன், கே.எல்.ராகுலுடன் இணைந்து வெற்றி இலக்கை நோக்கி அணியின் எண்ணிக்கையை நகர்த்தினார். ஆனால், கே.எல்.ராகுல் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிகோலஸ் பூரன் கடைசி வரை போராடியும் லக்னோ அணியால் 20 ஓவர்களில் 173 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதன்மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. நிகோலஸ் பூரன் கடைசி வரை அட்டமிழக்காமல் 64 ரன்கள் சேர்த்திருந்தார். ராஜஸ்தான் அணிக்காக போல்ட் 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

இப்போட்டியில், அபாரமாக விளையாடி 6 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 82 ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சன் 'ஆட்ட நாயகன்' விருதை வென்றார்.

- மகிழ்

பிரதமர் மோடியின் தாயாரை இழிவுபடுத்தினாரா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்? ED மனு மீது என்ன முடிவு?

ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ராஜ்நாத் சிங்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam