குலசேகரப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அப்போது, திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த செய்தித்தாள் விளம்பரத்தில் ஸ்டாலின் மற்றும் மோடி படத்திற்கு பின்புறத்தில் சீனக் கொடி பதித்த ராக்கெட்டின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததை குறிப்பிட்டு திமுகவை கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இன்று (பிப்ரவரி 29) செய்தியாளர்கள் சீனா கொடி விளம்பரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போது, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர் கலைஞர் தான். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் இதுகுறித்து மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தி வந்தார்.
மேலும் தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்திலும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தார்.
இப்படி திமுக செய்த தொடர் முயற்சிகள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் நேற்று குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா குறித்து செய்தித்தாளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
அதில் விளம்பரம் வடிவமைத்தவரின் தவறால் சீனா கொடி இடம்பெற்றுவிட்டது. அதனை நாங்களும் கவனிக்கவில்லை.
எங்கள் நெஞ்சில் இந்தியாவின் பற்று உள்ளது. எந்த வகையிலும் ஜாதி, மத மோதல்கள் இல்லாமல் இந்தியாவில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள்.
அப்படி இருக்கையில், விளம்பரம் வடிவமைத்தவரின் கவனக்குறைவால் மட்டுமே சீனா கொடி தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. இதில் வேறு ஒன்றும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
விவேகானந்தன்
தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் : 4 பேர் கைது… பாஜக மாவட்ட தலைவர் தலைமறைவு!
காங்கிரஸில் இணைந்தார் தமாகா அசோகன்
திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 2 இடங்கள்: கையெழுத்தானது உடன்பாடு!

