தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது நீலகிரி தேனாடுகம்பை காவல்துறையினர் இன்று (மார்ச் 29) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 25-ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நேற்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் எல்.முருகன் வேட்புமனு ஏற்கப்பட்டது.
இந்தநிலையில், மார்ச் 25-ஆம் தேதி உதகையை அடுத்துள்ள கடநாடு கிராமத்தில் முன் அனுமதி பெறாமல் எல்.முருகன் கூட்டம் நடத்தியுள்ளார். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முன் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதால், தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி தேனாடுகம்பை காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீலகிரி பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அதிமுக, பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
இதனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் மன்னிப்பு கேட்ட பின்னர் சாலை மறியலை வாபஸ் பெற்றனர்.
செல்வம்

