திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் 'அரசின் பயிற்சிப் பள்ளியில்' பயின்றவர் அல்ல என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரசத்தி பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் அம்மனின் கழுத்தில் இருந்த மாங்கல்யம், தாலி சங்கிலி ஆகியவை கடந்த மாதம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கோவில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரின் பேரில் திருவேற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் அம்மன் நகையை, தமிழ்நாடு அரசு கொண்டுவந்த பயிற்சிப் பட்டறையில் தேர்வாகி தற்போது அக்கோயிலின் தற்காலிக அர்ச்சகர் தான் திருடியதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக இன்று (மார்ச் 5) வெளியாகியுள்ள அறிக்கையில், "திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் நகையை அக்கோயிலின் தற்காலிக அர்ச்சகர் திருடி அடகு வைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த பயிற்சிப் பட்டறையில் தேர்வானவர்" என்று வதந்தி பரப்பப்படுகிறது.
ஆனால் உண்மை என்னவென்றால், கருமாரியம்மன் கோயில் நகையைத் திருடிய தற்காலிக அர்ச்சகர், தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பது முற்றிலும் பொய்யானதாகும்.
இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகராக பணியாற்றி வந்தவர் சண்முகம். தனது தந்தை சுப்பிரமணியன் ஐயரிடம் ஆகமப் பயிற்சி பெற்று அதன் அடிப்படையிலேயே பூஜை செய்யும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளார்.
சண்முகம் இக்கோயிலில் பணியாற்றிய போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 57 கிராம் தங்க செயினுடன் கூடிய திருமாங்கல்யத்தைத் திருடி அடகு வைத்துள்ளார். திருமாங்கல்யம் மீட்கப்பட்டு மீண்டும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலி அர்ச்சகரான சண்முகம் மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு 'முதல் தகவல் அறிக்கை' பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா

