Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாக்களிக்க முடியாமல் திரும்பிய நடிகர் சூரி வேதனை!

வாக்களிக்க முடியாமல் திரும்பிய நடிகர் சூரி வேதனை!

Minnambalam 2 years ago

க்களவை தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் சூரி, தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) தற்போது தமிழ்நாடு முழுவதும், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவில் மதியம் 3 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 51.41 சதவீதவாக்குகள் பதிவாகி உள்ளன.

சென்னையில் உள்ள வாக்குசாவடிகளில் இன்று காலை முதல் பொதுமக்களுடன் சேர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பரத், சித்தார்த், நகுல், யோகிபாபு ஆகியோர் வாக்களித்தனர்.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று வாக்களிக்க தனது மனைவியுடன் சென்றிருந்தார் நடிகர் சூரி.

ஆனால் அங்கு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வந்தேன். கடந்த அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த தடவை வாக்காளர் பட்டியலில் எனது பெயர் விடுபட்டு விட்டதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் எனது மனைவியின் பெயர் பட்டியலில் இருந்ததால் அவர் வாக்களித்தார். ஜனநாயக கடமையை என்னால் ஆற்ற முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

அனைவரும் வாக்களிக்க வேண்டியது நாட்டுக்கு முக்கியம். எனவே அனைவரும் தவறாமல் வாக்களித்து விடுங்கள்" என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

"ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்" : விஜய் வேண்டுகோள்!

திமுக நிர்வாகியை குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீஸ்… வாக்குச்சாவடியில் பதற்றம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam