RCBW vs DCW : 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இன்று (மார்ச் 17) நடைபெற்றது.
புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணி நேரடியாக இறுதிசுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டெல்லி அணிக்கு எதிராக களமிறங்கியது.
இரண்டு அணிகளுமே தங்கள் முதல் கோப்பைக்காக இப்போட்டியில் மோதிக்கொண்ட நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லேன்னிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிறப்பான துவக்கம்!
இதை தொடர்ந்து, ஷபாலி வர்மாவுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக மெக் லேன்னிங் துவக்க ஆட்டக்காரராகவும் களமிறங்கினார். அவர் ஒரு அதிரடியான துவக்கத்தையும் வழங்கினார். அதன் காரணமாக, பவர்-பிளே (முதல் 6 ஓவர்கள்) முடிவில் டெல்லி அணி 61 ரன்கள் குவித்தது.
ஆனால், பெங்களூரு அணிக்காக 8வது ஓவரை வீச வந்த சோஃபி மோலினியூக்ஸ், அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஷபாலி வர்மாவின் விக்கெட்டை கைப்பற்றி ஒரு திருப்பத்தை வழங்கினார்.
அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்ஸி என 2 நட்சத்திர வீராங்கனைகளையும் அதே ஓவரில் வெளியேற்றினார் மோலினியூக்ஸ்

டெல்லியை சிதைத்த ஸ்ரேயங்கா
மும்பை அணியை வீழ்த்த பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முக்கிய பங்கு வகித்தார்களோ, இந்த போட்டியிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தினர்.
27 பந்துகளில் 44 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்த மெக் லேன்னிங்கை, 11வது ஓவரில் வெளியேற்றினார் ஸ்ரேயங்கா பாட்டீல்.
பின், ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ஆஷா சோபனா ஆகியோரின் சூழலில் சிக்கி, அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதனால், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 113 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனது. பெங்களூர் அணிக்கு அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

நிதான துவக்கம்!
114 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணி, மிக நிதானமாகவே ஆட்டத்தை துவங்கியது. துவக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா - சோபி டிவைன் பவர்பிளே முடிவில் 25 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர்.
சோபி டிவைன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 10 ஓவர்கள் முடிவில் 56 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
அடுத்து, ஸ்மிருதி மந்தனா 31 ரன்களுக்கு வெளியேற, பெங்களூர் அணி 15 ஓவர்களில் 82 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

த்ரில் வெற்றி!
இதன் காரணமாக, கடைசி 5 ஓவர்களில் 32 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆர்சிபி சென்றது. அப்போது, தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷுடன் இணைந்து, பெங்களூர் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.
எல்லிஸ் பெர்ரி 35 ரன்களும், ரிச்சா கோஷ் 17 ரன்களும் சேர்க்க, கடைசி ஓவரில் ஒரு த்ரில் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் கோப்பையை கைப்பற்றியது.

