Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
யார் அந்த அண்ணாமலை? : திமுகவுக்கு மோடி பதில்!

யார் அந்த அண்ணாமலை? : திமுகவுக்கு மோடி பதில்!

Minnambalam 2 years ago

ண்ணாமலை களத்தில் வீரம் காட்டி வருகிறார். அவரை தெரியவில்லை என்று குடும்ப அரசியல் செய்து வரும் திமுக தலைவர் ஒருவர் கூறியுள்ளார் என்றும், அந்தளவுக்கு ஆணவம் அவர்களது கண்களை மறைக்கிறது.

இந்த ஆணவத்தை தமிழகம் அனுமதிக்காது என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் இன்று (ஏப்ரல் 10) நடைபெற்ற பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

அப்போது மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கோவை வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளர் எல்.முருகன், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன் மற்றும் திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜக அலை வீசுகிறது!

கூட்டத்தில் அவர் பேசியதாவது, "மேட்டுப்பாளையத்துக்கு கோவையின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் பொருந்தியிருக்கிறது. இவ்வளவு தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிக்கு வந்தால், ஒரு டீக்கடைக்காரருக்கு மகிழ்ச்சியாக இருக்காதா என்ன? விரைவில், தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடவுள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி எப்போதுமே பாஜகவுக்கு முக்கியமான இடம். வாஜ்பாய் காலத்தில் நீங்கள்தான் பாஜகவுக்கு எம்.பியை தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பினீர்கள்.

தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவின் அலை வீசுகிறது.

பழங்குடியின பெண் - குடியரசுத் தலைவர்!

திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட குடும்ப கட்சிகளுக்கு ஏதாவது பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோள்.

பல தலைமுறைகளாக ஆட்சியில் இருக்கும் இவர்கள் வறுமையை ஒழிப்பதாக ஒரே பொய் கூறி வருகின்றனர்.

ஆனால், அவர்கள் இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் நாட்டில் வறுமை நீங்கவில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த உடனே 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம்.

காங்கிரஸ் - திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் அடிப்படை எண்ணமே, ஏழை மக்களுக்கு வீடு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைத்துவிடாமல் அவர்கள் அப்படியேத்தான் இருக்க வேண்டும் என்பது தான்.

குடும்ப கட்சிகளைச் சேர்ந்தவர்கள், எப்போதும் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏழை, பட்டியலின, பழங்குடியின மக்கள் உயர் பதவிகளுக்கு வருவதை அவர்கள் விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை.

ஆனால், இந்தியாவில் முதன்முறையாக ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தது பாஜக அரசு. அதற்கும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆதரவு அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதலீடுகளை வரவிடாமல் திமுக முடக்கி வருகிறது!

இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் இந்தியா மக்களின் திறமையை நம்புவதில்லை. உதாரணமாக, கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மருந்து தயாரிப்பதாக கூறியபோது, இந்தியா கூட்டணியினர் அதை எள்ளி நகையாடினர் . ஆனால், இந்தியாவிலேயே தயாரித்த தடுப்பூசி மூலம் இந்தியா மட்டுமின்றி, பல உலக நாடுகளுக்கு வழங்கியதால், அங்குள்ள மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.

கொரோனா காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரமும் சீர்குலைந்துவிடும் என்று இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆரூடம் கூறினார்கள். அந்த கடுமையான காலக்கட்டத்தில், நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதற்காக, சிறு, குறு நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி நிதி உதவியை பாஜக அரசு வழங்கியது. அதனால்தான், தொழில் நகரமான இந்த கோவையில் ஆயிரக்கணக்கான எம்எஸ்எம்இ நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன.

நம்முடைய நாடு மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலகில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த முதலீடுகளை எல்லாம் வரவிடாமல் முடக்கி வருகிறது திமுக அரசு. அப்படிபட்ட கட்சிகளுடன் தான் அவர்கள் கூட்டணி வைப்பார்கள்.

திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாஜக அரசுதான், தமிழகத்தில், இந்த கோவைப் பகுதியில் ஒரு பாதுகாப்பு முனையத்தை உருவாக்கியிருக்கிறோம். இதனால், மிகப் பெரிய வளர்ச்சியும், மிகப்பெரிய லாபமும் இந்தப் பகுதிக்கு கிடைக்கவுள்ளது.

வளர்ந்த இந்தியாவுக்காக, வளர்ந்த தமிழகம்தான் உதவ முடியும்!

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களை எல்லாம் அந்த மாநிலத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடக்கிறது என்பதை வைத்தே மாநிலங்களின் நலன்கள் தீர்மானிக்கப்பட்டன.

ஆனால் இப்போது நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் எந்த மாநிலத்தில் யார் ஆட்சி செய்தாலும், அந்த மாநிலத்தின் உயர்வுக்காக மத்திய அரசு உதவுகிறது.

வளர்ந்த இந்தியாவுக்காக, வளர்ந்த தமிழகம்தான் உதவ முடியும். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்தால்தான், இந்த தேசம் உயரும் என்று பாஜக அரசு நம்புகிறது. அதனால்தான், தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல லட்சம் கோடிகளை வழங்கியிருக்கிறது.

கோவை உட்பட தமிழகத்தின் இரண்டு முக்கிய நகரங்களில், மாதிரி மாடல் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. கோவை பகுதிக்கு இரண்டு வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் இந்தியா கூட்டணி, பாரபட்சம், பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது.

15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர்!

ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அந்த திட்டத்தில், திமுகவினர் மட்டும் பயன் அடையும் வகையில் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இன்றளவும் இந்த கோவைப் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான், குடிக்க தண்ணீர் கிடைக்கிறது என்பது மிகவும் வருத்தமான விஷயம்.

திமுக அரசும், இந்தியா கூட்டணியும் எதிர்ப்பு அரசியல், வெறுப்பு அரசியலைத் தவிர உருப்படியாக எதையுமே செய்தது இல்லை. திமுகவின் கவனம் எப்போதுமே தமிழகத்தின் வளர்ச்சி மீது இருந்தது இல்லை. ஆனால், என்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து செயல்படும்போது, இந்த கொங்கு மண்டலம், நீலகிரியின் வளர்ச்சிக்காக இன்னும் வேகம்காட்டி வேகமாக செயல்படுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். இது மோடியின் கேரண்டி.

கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. ஆனால், அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய மாநில அரசு, தீவிரவாதிகளை காப்பாற்றவும், பாதுகாக்கவும் வேண்டிய வேலைகளை செய்கிறது.

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டது. அக்கோயிலின் திறப்பை இந்தியா கூட்டணி எதிர்க்கிறது. தமிழகத்தில் ராமர் கோயில் தொடர்புடைய நிறைய புண்ணிய தலங்கள் இருக்கிறது. அங்கெல்லாம் நானும் சென்று வந்தேன். ஆனால், அப்படிப்பட்ட புண்ணிய தலங்களுக்குச் செல்வதுகூட, இங்கு ஆட்சியில் உள்ள திமுகவுக்கு மிகவும் சிரமமானதாக இருக்கிறது. காரணம், அவர்கள் சனாதன தர்மத்தையே ஒழிக்கப்போவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை நிறுவுவதற்காக செங்கோலை நிறுவும் ஒரு மிகப் பெரிய பணியை மேற்கொண்டபோது, அதை தமிழகத்தைச் சேர்ந்த திமுகவும் புறக்கணித்தது.

கச்சத்தீவு - காங்கிரஸ், திமுக துரோகம் இழைத்தது!

சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர்தான் திமுக. இன்று இந்தியா 5ஜி என்ற உலக சாதனை படைத்து வருகிறது. ஆனால், திமுக 2ஜியில் ஊழல் செய்து நமது நாட்டையே அவமானப்படுத்தியது. ஊழல்வாதிகளை காப்பாற்றுவதுதான் திமுக - காங்கிரஸ் கட்சிகளின் முக்கியமான குறிக்கோள்.

ஒரு வாரத்துக்கு முன்பு நாம் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பினோம். காங்கிரஸும், திமுகவும் எப்படி ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் உயிரோட்டமான ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்பது குறித்து அரசு ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் தமிழகத்துக்கு இழைத்த அந்த துரோகம். இந்தியா கூட்டணியினர் இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தியதற்கு பாவப்பட்ட தமிழக மீனவர்கள்தான் அதற்கான விலையைக் கொடுத்து வருகின்றனர். திமுகவும், காங்கிரசும் செய்த இந்து துரோகத்துக்காக, வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்கள்தான் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

அண்ணாமலை தெரியாதா?

பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து திமுக தலைவர் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்கின்றனர். அவர் யார் இந்த அண்ணாமலை என்று கேட்கிறார். அந்தளவுக்கு ஆணவம் அவர்களது கண்களை மறைக்கிறது. இந்த ஆணவத்தை தமிழகம் என்றும் அனுமதிக்காது. திமுகவின் ஆணவம், தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, காவல் துறையில் இருந்த வந்த அந்த இளைஞர் களத்தில் வீரம் காட்டி வருகிறார். அவரை தெரியவில்லை என்று கூறுகின்றனர். இதுதான் அவர்களுடைய உண்மையான குணம். குடும்ப அரசியல் செய்து வரும் அவர்களுக்கு ஓர் இளைஞன் சாதாரண குடும்பத்தில் இருந்து முன்னேறி வருவது பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

திமுக குடும்ப அரசியலை வெளியேற்றும் தேர்தல்!

திமுக தலைவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு, இந்தத் தேர்தல் மோடியை இந்தியாவை விட்டு வெளியேறும் தேர்தல் என்று பேசுகிறார்.அவருக்கும் அவரது கட்சிக்கும் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இந்த தேர்தல் ஊழலை இந்தியாவைவிட்டே அகற்றும் தேர்தல். திமுகவின் குடும்ப அரசியலை இந்தியாவை விட்டே வெளியேற்றுகிற தேர்தல்.

கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, மற்றும் திருப்பூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் வெற்றி, தமிழகத்துக்கான புதிய பாதையை திறக்கப் போகிறது. இது மோடியின் உத்தரவாதம்" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

"இளையராஜா எல்லோருக்கும் மேலானவரா?" : இசையுரிமை வழக்கில் எழுந்த காரசார வாதம்!

ஊழல் யூனிவர்சிட்டியின் வேந்தர் மோடி : ஸ்டாலின் அட்டாக்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam