தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று (04-05-26) காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தவெக வசம் தற்போது சுமார் 108 தொகுதிகள் மட்டுமே உள்ளது.
மீதம் 10 தொகுதிகள் தேவையாக உள்ள நிலையில் எந்தக் கட்சியில் இருந்து தவெக ஆதரவை கோரப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளிடம் ஆதரவை கோருமா அல்லது நேரடியாக அதிமுகவிடம் ஆதரவு கோருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக அதிக இடங்களைப் பெற்று தமிழ்நாட்டில் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கும் அதன் தலைவர் விஜய்க்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிக தொகுதிகளில் வென்ற தவெக ஆட்சி அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தவெக சார்பில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆளுநர் மாளிகைக்கு நேரடியாக அனுப்பிய அந்த கடிதத்தில், 'நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 கிடைத்திருக்கிறது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை எனும் பட்சத்தில் மற்ற கட்சிகளின் ஆதரவை கோரி பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று சென்னை வரவுள்ள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் பார்வைக்கு அந்த கடிதம் செல்ல இருக்கிறது. அதன் பின்னர், ஆளுநர் அதை பரிசீலித்து தவெக நிர்வாகிகளை அழைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

