ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வரிசையில், வளைகுடா நாடுகளான குவைத், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்களை ஈரான் தாக்கியது.
இதனைத் தொடர்ந்து, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களையும் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதே போல, அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் விமானங்களையும் ஈரான் தாக்கியது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கல்வி நிறுவனங்கள் மாறும் வங்கிகளையும் தாக்கப்போவதாக ஈரான் அறிவித்திருந்தது. அதே நேரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுடன் தொடர்புடைய முன்னணி நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த நிறுவனங்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. அதில் ஆப்பிள், கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட், ஹெச்பி, டெஸ்லா, என்விடியா, ஆரக்கிள், போயிங், ஐபிஎம், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்த சில மணி நேரங்களில், பஹ்ரைனில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மையத்தின் மீது ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த போர் சூழலில் அமெரிக்க ராணுவம் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் திறன்களை அதிகளவில் சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்தது மற்றும் ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அமெரிக்க ராணுவ பகுப்பாய்வு மற்றும் செயல்பாட்டு ஆதரவிற்காகச் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, எங்கள் எதிரியின் ராணுவ மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களின் தரவு மையங்களும் எங்கள் தாக்குதல் இலக்கு பட்டியலில் இடம்பிடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், போரின் போது வணிகரீதியான கிளவுட் தரவு மையங்களை ஒரு அரசு தரப்பு குறிவைத்துத் தாக்குதல் நடத்திய முதல் ராணுவத் தாக்குதல் இதுவென்று கூறப்படுகிறது.

