தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு விதிகளை மீறி, அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதன் அடிப்படையில், நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளையில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் நிலையை நேரடியாகக் கண்காணிக்க தமிழக இயற்கை வளங்கள் துறை இந்த ஆய்வை மேற்கொண்டார்.
அந்த வகையில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை நீடித்த இந்த ஆய்வின் போது, சோதனைச் சாவடி வழியாக கேரளாவுக்குச் சென்ற கனரக வாகனங்களை நிறுத்தி, அவற்றின் டிரான்சிட் பாஸ், உரிய அனுமதி ஆவணங்கள், லாரிகளின் எடை மற்றும் காவலர்களின் பாதுகாப்புப் பணி நிலவரங்களை அமைச்சர் டி.கே.பிரபு கணினி மற்றும் ஆவணங்கள் வாயிலாக நேரடியாகப் பரிசோதித்தார். மேலும் அங்கிருந்த எடை மேடையைச் சரிபார்த்த அவர், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறதா என்பதையும் தீவிரமாக ஆய்வு செய்தார்.
இந்தத் திடீர் ஆய்வைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் டி.கே. பிரபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ' தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 54 கற்குவாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி உதவி ஆட்சியர்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 09.05.2026 முதல், ஆய்வு செய்யப்பட்டன. மேலும் அமைச்சர் டி.கே.பிரபு நேற்று (25.05.2026) அன்று அதிகாலை தென்காசி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து அமைச்சர் டி.கே. பிரபுவின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட 3 குழுக்களின் முதல்கட்ட புலத்தணிக்கையின் போது மொத்தமுள்ள 54 கற்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 18 கற்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், மேற்படி 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

