கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜகவின் சார்பு அணியான அகில பாரத் வித்யார்த்தி பரிஷத் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை தனிப்பட்ட முறையில் பெண்களுடன் தொடர்புபடுத்தி கீழ்தரமாக விமர்சித்துள்ளார்.
இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்ட மேடைக்கு அருகே வந்து, எங்கள் தலைவரை ஏன் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு மேடையில் இருந்தவர்களுக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மேடையில் இருந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காலால் எட்டி உதைக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைவரை தரம் தாழ்ந்து தரை குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதே பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்வளவன் தலைமையில் சிதம்பரம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.

