மாணவர்கள் மாற்றும் இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்று (25-07-26) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் துணிச்சலான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என, பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய ஆளுமைகள் மற்றும் பொது மக்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில், 'தர்மேந்திர பிரதானின் ராஜினாமா, நமது கல்வி முறையை மறுவடிவமைப்பதற்கான ஒரு மாபெரும் படியாகும். நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்குப் பாராட்டுகள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க வீதிகளில் இறங்கி உறுதியாக நின்ற ஒவ்வொரு இளைஞருக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்னும் இரண்டு கோரிக்கைகள் எஞ்சியுள்ளன - பிரதமர், மாணவர்களையும், இந்தியாவின் எதிர்காலத்தையும் மதித்து போராட்டத்தில் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல, சமூகத்தில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் என இந்த அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், ஒருவரின் கண்ணியத்திற்காக அரசியலமைப்புக்கு உட்பட்டு உறுதியாக நிற்பதில்தான் உண்மையான தைரியம் அடங்கியுள்ளது. தற்போது, இந்த பாஜக அரசை முற்றிலும் அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

