உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பத்ரிநாத் கோயிலில் நன்கொடை மற்றும் காணிக்கை விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இது நாடு முழுவதும் பிரபலமாக அறியப்பட்ட ஒரு ஆன்மீக தளமாகும். இந்நிலையில், இந்த கோயிலில் இப்படியான முறைகேடான சம்பவம் நிகழ்ந்துள்ளது நடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இது சம்பந்தமாக, மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியா கூறுகையில், ' பத்ரிநாத் கோயில் நன்கொடை தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. இதற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில அரசே பொறுப்பு. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முன்பு, அயோத்தி ராமர் கோயிலிலும், தற்போது பத்ரிநாத் கோயிலிலும் நன்கொடை தொடர்பான முறைகேடு எழுந்துள்ளன. இந்த சம்பவங்கள் சனாதனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோரின் மனதைப் புண்படுத்தியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், கோயிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட நன்கொடை பொருட்கள் முறையாகக் கணக்கில் சேர்க்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. இதனை ஆரம்பத்தில் கோயில் நிர்வாகக் குழு மறுத்தாலும், பின்பு எழுந்த தொடர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணையில், சிசிடிவி காட்சிகள், ஆவணங்கள், பாதுகாப்பு பதிவுகள் மற்றும் ஊழியர்களின் வாக்கு மூலங்கள் ஆகியவை முக்கிய ஆதாரங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

