தமிழக அரசியலில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிக இடங்களை வென்று தவெகவினர் சட்டமன்ற பிரதிநிதித்துவம் பெற இருக்கின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக ஆட்சி அமைக்கவுள்ளது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 தேவை எனும் பட்சத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், சேலம் மேற்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெகவின் எஸ்.லட்சுமணன், தனது செய்தியாளர்கள் சந்திப்பிலேயே வெளியிட்ட அறிவிப்பு சேலம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது எஸ்.லட்சுமணன் செய்தியாளரைச் சந்தித்து அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, 'சேலத்தில் உள்ள ஜவுளிப் பூங்காவில் (Textile Park) தற்போது நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்துவதே தனது முதன்மையான நோக்கம்' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் 'சேலம் ஜவுளி பூங்கா (Salem textile park) என்ற முக்கியமான திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் சேலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உதவும் திட்டமாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த திட்டம் நிறுத்தப்படும் என்று அந்த தொகுதி எம்.எல்.ஏ தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

