விஜய் அரசு பதவியேற்ற 16 நாட்களில் 32க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் கேட்பாரின்றி நடந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது காவல் நிலையத்திலும் விவசாயி தாக்கப்பட்டதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்டத்தை தகிக்க வைத்திருக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் சிவகிரி பக்கமுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்த விவசாயியான அந்தோணி ராஜூக்கும் அருகில் வசிக்கு பேச்சிப்பாண்டி மனைவி பசுபதி என்வருக்கும் இடப் பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. அந்த இடத்தில் கட்டுமானப் பணி மேற்கொண்டு வந்திருக்கிறார் அந்தோணி ராஜ். இதுகுறித்து கடந்த 1ம் தேதி பசுபதி சிவகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அதன் பேரில் எஸ்.ஐ. சோலையப்பன் இரு தரப்பினரையும் வரவழைத்து விசாரணை செய்திருக்கிறார்கள். பின்பு பிரச்சினைக்குறிய இடத்தை அரசு சர்வேயர் மூலம் அளந்த பிறகுதான் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகும் பிரச்சினையிருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வுகாணவேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே கடந்த 15ம் தேதி அந்தோணி ராஜ் பிரச்சினைக்குரிய இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து தொடர்ந்து பசுபதி மீண்டும் சிவகிரி இன்ஸ்பெக்டர் முரளிதரனிடம் புகார் அளித்திருக்கிறார். அதன் பேரில் இரு தரப்பினரையும் வரவழைத்த ஆய்வாளர் அரசு சர்வேயர் அளவீடு செய்யும் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று இருவருக்குமே அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து அந்தோணிராஜ் கட்டுமானப் பணியை மேற்கொண்டதால் போலீசார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதனடிப்படையில் கடந்த 21ம் தேதி மாலை ஆறரை மணியளவில் அங்கு சென்ற அந்தோணி ராஜை இன்ஸ்பெக்டர் முரளிதரன் 2 முறை எச்சரித்தும் கட்டுமானப் பணியை மேற்கொள்கிறாயா என அதட்டியவர் அவரை அவதூறாகப் பேசி தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் மனவேதனை மற்றும் அவமானமடைந்த அந்தோணி ராஜ் தனது பையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை மடமடவென குடித்தவர் சற்று நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை ஆட்டோவில் விரைவாக சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அது பலனளிக்காமல் நேற்று மாலை (மே 24) அவரது உயிர் பரிதாபமாக பிரிந்திருக்கிறது.
இந்நிலையில அந்தோணி ராஜின் மனைவி செல்லம்மாள் தனது கணவரை போலீசார் அவதூறாகப் பேசி தாக்கியதால் அவர் மனமுடைந்து அவமானத்தால் விஷம் குடித்தார். எனவே இது சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் அதுவரை அவரது உடலை வாங்கமாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தவர் உறவினர் மற்றும் பொதுமக்களோடு சிவகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பு மற்றும் பதட்டமான சூழலைக் கிளப்ப அங்குவந்த புளியங்குடி டி.எஸ்.பி. மதன் போராட்டத்தில் ஈடுபட்டிருநுத அந்தோணி ராஜ் மகன் இசக்கிதுரை மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் அவரது சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத உறவினரும் மக்களும் தொடர்ந்து சிவகிரி காவல் நிலையத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நெல்லை எஸ்.பி. பிரசன்ன குமார் இவ்விவகாரம் தொடர்பாக சிவகிரி காவல்நிலைய போலீசாரிடம் தனித்தனியே விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து போலீஸ் நிலையத்திலுள்ள சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தார். இடப்பிரச்சினையில் புகார் செய்த பசுபதியிடமும் விசாரணையை மேற்கொண்ட எஸ்.பி. பிரசன்ன குமார் விரைவில் சரக டி.ஐ.ஜி.யிடம் அறிக்கை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவல் ஆய்வாளர் உள்பட 2 காவலர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டி.ஐ.ஜி.யின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் காத்திருப்போர் பட்டியலிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். மக்களின் தீவிரப் போராட்டத்தை தொடர்ந்து ஆய்வாளர் முரளிதரன், காவலர்கள் கனகராஜ், முத்து ஆகியார் மீது sec : 176/26, sec : 296 (6), sec 115(2) sec 108 தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விவசாயி தற்கொலைச் சம்பவத்தின் பதற்றம் தணியாமல் சிவகிரி ஏரியாவை கடும் ஆத்திரத்தில் தள்ளியிருக்கிறது.

