கடந்த ஆட்சியாளர்கள் தலா 500 டாஸ்மாக் கடைகளை மூடினர். புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு பேருந்து நிலையம், பள்ளிகள், கோயில் போன்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கைடைகளில் முதல்கட்டமாக 717 கடைகளை மூட உத்தரவிட்டது.
மூடப்படும் கடைகளின் விபரங்களும் வெளியானது. பிறகு அந்த உத்தரவில் திருத்தம் செய்தனர். இறுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை மூடாமல் விற்பனை குறைவாக உள்ள டாஸ்மாக்கடைகளை மூடி 717 கடைகள் மூடியாச்சு என்று கணக்கை சரி செய்தனர்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவார் கிராத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள், பொதுமக்கள் 6 முறை போராடியும் பலனில்லை. இந்த நிலையில் தான் வியாழக்கிழமை காலை டாஸ்மாக் கடை அருகே மெய்யம்மாள் தலைமையில் திரண்ட பெண்கள் டாஸ்மாக் கடை மற்றும் அந்த வளாகம் முழுவதும் முள் மற்றும் மரக்கிளைகளை வெட்டிப் போட்டு டாஸ்மாக் கடைக்கு போகவிடாமல் அடைத்தனர். தொடர்ந்து காலை 9 மணி முதல் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனால் டாஸ்மாக் கடை மதியம் 2 மணி வரை திறக்கப்படவில்லை.
தகவல் அறிந்து வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டடாட்சியர் பிரகாஷ், டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளர் கேசவன், கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் பரணி, மற்றும் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊருக்குள் இருக்கும் இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் ரொம்பவே பாதிக்கப்படுகிறோம். இரவில் குடித்துவிட்டு செல்லும் நபர்கள் எங்க வீட்டுக் கதவுகளை தட்டுகின்றனர். ஒவ்வொரு நாளும் கூலி வேலை செய்துவிட்டு வந்து நிம்மதியாக தூங்கமுடியவில்லை. குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செசல்ல பயமாக உள்ளது. இதுவரை 6 முறை போராடிவிட்டோம் எந்தப் பயனும் இல்லை.
இந்த முறையும் அப்படி ஏமாந்து போகமாட்டோம் என்று உறுதியாக கூறினர். பேச்சுவார்த்தையின் முடிவில் இன்னும் 25 நாளில் துவாரில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்கிறோம் என்று எழுதிக் கொடுத்த பிறகே டாஸ்மாக் கடையை திறக்க அனுமதித்து சாலை மறியலை கைவிட்டனர். கூட்டத்தில் இருந்த பெண்களோ, இப்ப கூட டாஸ்மாக் கடையை மூடுறோம் என்று சொல்ல அதிகாரிகள் முன்வரவில்லை. கடையே வேறு இடத்திற்கு மாற்றுவதாக தான் சொல்கிறார்கள். பாதிக்கப்படுவது ஏழை கூலி தொழிலாளி குடும்பங்கள் தானே. அதிகாரிகளுக்கு என்ன? என்றனர்.

