அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சி சார்பாக நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அதாவது மத்திய மத்திய தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர்.சி போட்டியிடுகிறார்.
சுந்தர்.சியின் சமீபத்திய படங்களை தொடர்ந்து தயாரித்த புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுந்தர்.சி வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இருவரும் சினிமாவில் ஒன்றாக பயணித்து வந்த நிலையில், இந்த முறை அரசியலிலும் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். அதன்படி அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் சுந்தர்.சி இன்று (04-04-26) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த அவருடைய சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது சுந்தர்.சி பெயரில் ரூ.2.97 கோடி அசையும் சொத்து, அவருடைய மனைவியும் பா.ஜ.க நிர்வாகியுமான நடிகை குஷ்பு பெயரில் ரூ.6 கோடி அசையும் சொத்தும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், சுந்தர்.சி பெயரில் ரூ.17.7 கோடி அசையா சொத்து, குஷ்பு பெயரில் ரூ.4.17 அசையா சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர்.சியிடம் 3 கார்களும், குஷ்புவிடம் ஒரு காரும் உள்ளதாக வேட்புமனுவில் சுந்தர்.சி குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கமும், 24 கிலோ வெள்ளி பொருட்களும் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

