சென்னையில் ஆளுநரை சந்தித்த பின் அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.பி இன்பதுரை ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசுகையில் ''அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் ஆளுநரை அவர்களை நேரடியாகச் சந்தித்து ஏற்கனவே ஆளுநரிடத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவின் மீதும் ஏற்கனவே சட்டப்பேரவை தலைவர் இடத்தில் கொடுக்கப்பட்ட மனுவின் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் ஆளுநரை நேரில் சந்தித்து, அதிமுக சார்பில் எங்களால் கொடுக்கப்பட்ட புகார் மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் மேலும் ஒரு புகாரை தந்திருக்கிறோம். அந்த புகார் அடிப்படையில் ஆளுநர் அவர்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தின் அடிப்படையில் நாங்கள் கொடுத்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். ஏற்கனவே குதிரை பேரத்தின் மூலமாக அதிமுகவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், அதன்பிறகு ஒரு சட்டமன்ற உறுப்பினர், அதன் பிறகு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை வேகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற இந்த அரசு விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதை கண்டித்தும் தொடர்ந்து, இதுபோன்ற நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆளுநர் இடத்தில் நாங்கள் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறோம்.
ஆளுநர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி அவருக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் நாங்கள் கொடுத்திருக்கின்ற மனுவின் மீது சொல்லியிருக்கிற கருத்துக்கள் அடிப்படையில் உடனடி நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்'' என்றார்.

