சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று திடீரென கடத்தப்பட்டதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதோடு மருத்துவமனை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தீவிர விசாரணை நடத்தியும் தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.
இந்த துரித நடவடிக்கையின் பலனாக, குழந்தை கடத்தப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள் புளியந்தோப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். மேலும், இந்த குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ரோஸ் மேரி என்ற பெண்ணை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை எவ்வித பாதிப்பும் இன்றி நலமாக இருப்பதாகவும், உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மிகக் குறுகிய காலத்தில் குழந்தையை மீட்ட காவல் துறையினருக்குப் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

