தமிழ் திரையுலகில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பேனரில் பல்வேறு படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி. இவர் தயாரித்த ஆனந்தம், திருப்பாச்சி,புது வசந்தம், நாட்டாமை, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தவை.
கடைசியாக வடிவேலு - ஃபகத் ஃபாசில் நடித்த மாரீசன் படத்தைத் தயாரித்திருந்தார்.
இதையடுத்து தனது பேனரின் 100வது படத்தைத் தயாரிக்க முயற்சித்து வந்தார். இதற்காக நடிகர் விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் அது சுமுகமாக முடியவில்லை. இவர் பிரபல தமிழ் நடிகர்களான ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தை ஆவார். இந்த சூழலில் ஆர்.பி.சௌத்ரி, தனது பூர்வீக ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு காரில் சென்ற போது விபத்துக்குள்ளானார். அதில் படுகாயமடைந்த அவர், பின்பு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அவரது உடல் இன்று மதியம் 2 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்பு அவரது உடல் மயிலாப்பூரில் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், துக்கத்தில் இருந்த ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினார். விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த 'பூவே உனக்காக' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி. சௌத்ரி ஆவார்.

