தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனிடையே நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி வருகிறார்.
அந்த வகையில் கர்நாடகாவின் தார்வாடில் உள்ள கர்நாடக வித்யாவர்தக சங்கம் சார்பாக, 'மனிதநேயத்தை நோக்கிய உலக சமூகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அப்போது, அந்த அரங்கத்திற்கு வெளியே பிரகாஷ் ராஜுக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். அந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ், இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பார் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே பிரகாஷ் ராஜின் ஆதரவாளர்களும் அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே திரண்டு அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு, போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தி, சிறு வாக்குவாதங்களுக்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பலரை அதிரடியாகக் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

