நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்த 12 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த போராட்டம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின், போது காவல்துறையினர் இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். இந்த சம்பவம், நாடும் முழுவதும் மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், இந்த விவகாரத்திற்குக் காரணமாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மாணவர்களின் இந்த கோரிக்கைக்குச் செவி சாய்க்காத ஒன்றிய அரசு, மாணவர்களை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகப் பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இந்த போராட்டத்தின் புதிய முயற்சியாக, இளைஞர்கள் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது, சமீபத்தில் மெலோனி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவின் பின்னூட்டத்தில் 'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்' எனக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'உங்களின் இனிய நண்பரான நரேந்திர மோடியைப் பதவி விலகச் சொல்லுங்கள்', 'நீட் வினாத்தாள் கசிவு குறித்து மக்கள் பேசுகிறார்கள், அதைக் கேளுங்கள்' என்று நரேந்திர மோடியிடம் கூறுங்கள். 'ஜூலை 20 அன்று இளைஞர்கள் என்ன தவறு செய்தார்கள்? என்று அவரிடம் கேளுங்கள்' என பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற லட்சக்கணக்கான கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் உலக அளவில் வைரலாகி வருகிறது.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் நரேந்திர மோடி மற்றும் மெலோனி ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களைக் கையில் பிடித்திருந்தனர். அதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

