தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தரமாட்டோம் எனவும், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனவும் கர்நாடகா காங்கிரஸ் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், உரிய நீர் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழக விவசாயிகளும், தமிழக மக்களும் கவலையில் இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தால் தமிழ்நாடு - கர்நாடகாவுக்கு இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது.
இந்த சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 45வது ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் (30-07-26) காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ஏற்று கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிடுமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையில், காவிரியின் உடைய நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதலே கேரளா மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த அடிப்படையில், காவிரியில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே தண்ணீர் அணைகளை நோக்கி அதிகமாக வர தொடங்கிருக்கின்றன. குறிப்பாக பெரிய அணைகளாக கருதப்படும் கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு கிட்டத்தட்ட 15,000 கன அடி என்ற அளவில் வினாடிக்கு வந்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா அணைகள் நிரம்பி வருகிறது என்றும் இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல என்றும் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாவது, 'கர்நாடகா அணைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் அதிக நீரை தேக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாம் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவோம். இயற்கை என்பது யாருக்கும் சொந்தமானது அல்ல. எனவே தண்ணீரை நாம் திறந்துவிட வேண்டும். மேலும், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிரான முழு கடையடைப்பு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக கூறி வந்த நிலையில், கர்நாடகா அணைகள் நிரம்பி வருவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

