புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சப் டிவிசனில் அதிகமான கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதால் மாற்றுப் போதையில் சிக்கியுள்ள இளைஞர்கள் ஆங்காங்கே பொது மக்களிடமும் பொது வெளியிலும் பிரச்சனைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த தகவல்களையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலிசார் சேகரித்த தகவல்களின் பேரில் ஆலங்குடி போலிசார் கஞ்சா விற்பனை செய்த இருவரைக் கைது செய்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி போலிசாரின் தேடுதலில், ஆலங்குடி அண்ணாநகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து டிப்பர் லாரி ஓட்டும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஜீவாநகர் ராஜா மகன் சூர்யா (26), மற்றும் ஆவணத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து மாற்று டிரைவராக செல்லும் மழையூர் அரியாண்டி காலனி குமார் மகன் பிரசாந்த் (24) ஆகிய இருவரையும் கஞ்சா பொட்டலங்களுடன் போலிசார் கைது செய்து விசாரணை செய்த போதே அவர்களின செல்போன்களுக்கு பலர் பொட்டலம் கேட்டு போன் செய்துள்ளனர். மேலும் விசாரணையில், இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூர்களில் தங்கி இருந்து பெயருக்கு டிரைவராக வேலை செய்தாலும் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மொத்தமாகக் கஞ்சா வாங்கி 5 கிராம் பாக்கெட் போட்டு விற்பனை செய்கிறோம்.
எங்களுக்கென்று கஞ்சா போதைக்கு அடிமையான நிறைய இளைஞர்கள், மாணவர்கள் ஆலங்குடி, கீரமங்கலம், வடகாடு, திருச்சிற்றம்பலம் என பல ஊர்களிலும் கஸ்டமர்கள் உள்ளனர். எங்கள் செல்போன்களுக்கு அழைப்பு வரும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவைத்து பொட்டலம் கொடுப்போம். அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ஊர்களில் பொருள் வாங்குவோம். வெளியில் நாங்க டிரைவர் ஆனால் உள்ளுக்குள் கஞ்சா வியாபாரம் தான் பிரதானம் என்று கூறியுள்ளனர். இவர்கள் கைதை தொடர்ந்து மேலும், சோதனைகளும் தேடல்களும் தொடர்கிறது.

