உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நன்கொடை மற்றும் காணிக்கை பணம் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த புகாரை விசாரணை செய்ய ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை தொடங்கியதில் இருந்து பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் வெளியாகின்றன.
இந்த விசாரணையில், இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒரு இளைஞர் காணிக்கை பணத்தைத் திருடி தனது காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்திருப்பது மட்டுமல்லாமல் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. அந்த வகையில், மற்றொரு சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, போலியாக தயாரிக்கப்பட்ட நன்கொடை ரசீதுகளை வழங்கி பக்தர்களிடம் இருந்து பணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்தான விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதனை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போலி ரசீது புத்தகங்கள் அசல் ரசீதுகளைப் போன்றே அச்சு அசலாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் போலி ரசீதுகளில் அறக்கட்டளையின் முத்திரையும் இருந்ததால், அவை உண்மையானவை போலவே தோற்றமளித்தன. அதனால், யாருக்கும் இதில் சந்தேகம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த போலி ரசீதுகளைப் பயன்படுத்தி நன்கொடை பெற்றுள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு பணம்? முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தான முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், நன்கொடை, காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 6 ஊழியர்கள், காலப் போக்கில் சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கையாடல் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்படி இருகையில், போலி ரசீது மூலமாக எவ்வளவு பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த சம்பவத்தில் தோண்டத் தோண்ட வெளிவரும் பல உண்மைகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

