கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவேரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கடந்த 15ஆம் தேதி (15.08.2026) அதிகாலையில் வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அந்தோணிசாமி (வயது 50), ஜான் ரோஸ் பீட்டர் (வயது 42) மற்றும் லாசர் குமார் (வயது 33) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்கள் சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்து வேட்டையாட முயன்றதாகவும், தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை தெரிவித்திருந்தது.
அதோடு, சம்பவ இடத்திலிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மான் இறைச்சியைக் கைப்பற்றியதாக வனத்துறையின் தகவல் தெரிவித்திருந்தனர். அதே சமயம் காட்டிற்குள் மேய்ச்சலுக்குச் சென்ற தங்களது கால்நடைகளைத் தேடியே அவர்கள் சென்றதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், கிராம மக்களும் வனத்துறையின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பலியானவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், உயிரிழந்தவர்களின் விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, உடலில் கடுமையான சித்திரவதைக் காயங்கள் இருப்பதும், அவர்கள் மிக அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அதோடு இது ஒரு போலி என்கவுன்ட்டர் படுகொலை என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் எதிரொலித்து பெரும் விவாதப் பொருளானது.
இதனையடுத்து சிபிஐ அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த சூழலில், வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இந்த விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

