சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 5 வருட திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று தவெக ஆட்சி அமைக்கவுள்ளது.
ஆனால், 234 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 தேவை எனும் பட்சத்தில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது.
தவெக அதிக இடங்களை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் மற்ற கட்சிகளுடன் தவெக ஆதரவு கோரி ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அதே நேரம் ஆட்சி அமைக்க தங்களை ஆதரிக்குமாறு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தவெக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அந்த 1 இடம் காலியாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு மேலும் 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலையில் தவெக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, தவெக ஆட்சிக்கு அமைப்பதற்கு ஆதரவு தருவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவும் ஆலோசனை நடத்தி வருகிறது. அதே போல் அதிமுகவினர் ஒரு பிரிவினர் தவெகவை ஆதரிக்க உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் எஸ்.பி வேலுமணி ஆலோசனை நடத்தினார். அப்போது சி.வி.சண்முகத்திடம் தவெகவுக்கு ஆதரவு அளிக்கப் போகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'நான் எதையும் கூற முடியாது, கட்சியே முடிவு செய்யும்' என்று கூறினார்.

