தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 108 இடங்களை வென்று ஆட்சி அமைக்கவுள்ளது.
ஆனால், 234 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 தேவை எனும் பட்சத்தில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது.
தவெக அதிக இடங்களை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோருவதற்கு தவெக ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி தவெக தலைமையில் பிற கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோரி ஆட்சி அமைப்பதற்கும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் 2 வாரம் அவகாசம் வேண்டுமென தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனால், மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோருவதற்கு தவெக முனைப்பு காட்டி வருகிறது.
அதே போல், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அதே நேரம் ஆட்சி அமைக்க தங்களை ஆதரிக்குமாறு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தவெக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அந்த 1 இடம் காலியாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு மேலும் 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலையில் தவெக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், விஜய் ஆட்சி அமைப்பதற்கு குறித்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'மெஜாரிட்டியாக 35% வாக்குகளை பெற்றுள்ளதாக விஜய் கூறியுள்ளார். எம்எல்ஏக்களின் எண்ணிக்கை வேண்டும் என கேட்டுள்ளேன். எம்எல்ஏக்களின் எண்ணிக்கை விவரத்தை சொல்வதாக விஜய் கூறியுள்ளார். 118 அல்லது மேற்பட்ட எம்எம்எல்ஏக்கள் ஆதரிப்பதாக நிரூபிக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு என பல ஆப்ஷன்கள் உள்ளன. அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு முடிவு எடுப்பேன். குறிப்பிட்ட காலத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்தரவிடலாம்' என்று தெரிவித்துள்ளார்.

