பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை உறுதிச் செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, 'வாய்ஸ் டூ லா (VOICE2LAW) என்ற தலைப்பில் சென்னையில் இன்று (25-07-26) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'இந்த பேரணிக்கு அனுமதி கொடுத்த சிஎம் விஜய் சாருக்கு ரொம்ப நன்றி. காவல்துறை அதிகாரிகளுக்கு ரொம்ப நன்றி. ஏனென்றால் இதுவரை பிரச்சாரம், போராட்டம், பேரணி செய்வதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால், நாங்கள் சான்றாக இருக்கிறோம். சரியான வழிமுறையை பின்பற்றினால் அனுமதி கொடுப்பார்கள். நாங்கள் பின்பற்றிருக்கிறோம், அனுமதி வந்திருக்கிறது. நாங்கள் அமைதி பேரணி நடத்த இருக்கிறோம். பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். உடனடியாக நீதியை தருவோம் என்று விஜய் சார் சொல்லிருக்காரு, நடக்கட்டும்.
பாலியல் வழக்கில் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து அவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் நாங்கள் வரி கொடுத்து பார்த்துக்கொள்ள வேண்டுமா? எதற்கு அவர்கள் உயிரோடு இருக்கணும்? பாலியல் துன்புறுத்தல் பாலியல் வன்கொடுமை ஆகாது என சில நீதிபதிகள் கருத்து சொல்வதை கேள்விப்படுகிறோம். இது முட்டாள்தனமாக இருக்கிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதற்காக தான் நாங்கள் குரல் கொடுக்க வந்திருக்கிறோம். தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். தனி மனித ஒழுக்கம் வர வேண்டும்' என்று ஆவேசமாகப் பேசினார்.

