தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.
ஜோசப் விஜய் நேற்று (23.06.2026) பதிலளித்து உரையாற்றினார். இதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளை சுட்டிக்காட்டிய முதல்வர் விஜய், அவர்கள் இருந்திருந்தால் ஒரு சைகை காட்டலாம் என்று நினைத்திருந்தேன். அவர்கள் போய்விட்டார்கள். இருப்பினும், நீங்கள் அனுமதித்தால் அந்த சைகையைக் காட்டலாம் என்று நினைக்கிறேன் என்று முதல்வர் விஜய் சபாநாயகரிடம் அனுமதி கோரினார். இதற்குச் சபாநாயகர் அனுமதியளித்த நிலையில், முதல்வர் விஜய் அந்த சைகையைச் செய்தார்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், விருதுநகரின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 'யாரையும் யாரும் தாழ்வு பாராட்டக் கூடாது; அது முதல்வராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி, பிரதிநிதியாக இருந்தாலும் சரி, யாரையும் யாரும் தாழ்வு பாராட்டக் கூடாது. யாரையும் உடல்மொழியால் கடந்து செல்லக்கூடாது. எவ்வளவுதான் நேரெதிர் கருத்து இருந்தாலும் பண்பு தவறிய வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஒருவரை ஒருவர் மதித்து, ஒருவரை ஒருவர் நிரப்பிக் கொள்வதில்தான் ஜனநாயகத்தின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. அந்த வகையில் எல்லோருமே கூட்டாகச் சிந்திக்க வேண்டும்.
யார் தவறு செய்தாலும் அது தவறு; உயர் பொறுப்பில் இருக்கிறவர்கள் கூடுதலாகப் பொறுப்புடன் இருக்க வேண்டும். முதல்வர் 'அந்தத் தந்தையைத் தேடுகிறேன்' என்று சொன்னது ஏற்புடையது அல்ல. அதற்கு இன்னொரு மறுமொழியில் எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதும், 'பிள்ளைகளை, துணைவியரை அழைத்து எங்கே தேடுகிறோம்' என்று சொல்வதும் ஏற்புடையது அல்ல. இது நமது மரபுகளுக்கும் பண்புக் கூறுகளுக்கும் முரணானது; அதிலிருந்து நாம் கடந்து செல்ல வேண்டும்' எனத் தெரிவித்தார்.

