தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'மாணவர் நலனைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என்பதை வார்த்தையில் மட்டுமன்றி தனது செயலிலும் செய்து காட்டியுள்ளார், நமது பாரதப் பிரதமர்நரேந்திர மோடி அவர்கள்.
சமூக விரோத சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் உன்னத நோக்கத்திற்காக தனது பதவியையே துணிச்சலுடன் தியாகம் செய்துள்ளார், நமது முன்னாள் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்கள்.
சுயநலத்தை ஒதுக்கிவிட்டு, பொதுநலத்தை போற்றும் இத்தகைய தலைவர்களைப் பெற்றதால் தான், பாஜக ஓர் பேரியக்கமாக இன்றும் வளர்ந்து கொண்டே வருகிறது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்காக அமைதியான வழியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்திற்குள், சமூக விரோத அமைப்புகள் ஊடுருவத் தொடங்கியதையும், நமது தேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் எதிரான முழக்கங்கள் ஒலிக்க ஆரம்பித்ததையும் யாரும் மறுக்க முடியாது. தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணவர்களை குறி வைத்து காய் நகர்த்தத் துவங்கின. அதன் விளைவாகவே, அமைதிப் போராட்டம் அலங்கோலக் கலவரமாக உருவெடுக்கத் துவங்கியது. ஏராளமான பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
வினாத்தாள் கசிவினைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய தேர்வு முகமையின் 47 அதிகாரிகள் பணிநீக்கம், வினாத்தாள் கசிவு வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்,
வினாத்தாள் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 10 கோடி வரை அபராதம் மற்றும் வினாத்தாள் கசிவிற்கு எதிரான new Anti-Paper Leak Bill 2026 உள்ளிட்ட பல கடும் நடவடிக்கைகளை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் முன்மொழிந்த பிறகும் கூட, மாணவர்கள் போராட்டம் நீடித்தது.
இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 'மாணவர் போராட்டம்' என்ற போர்வையில், பொது அமைதிக்கும், மாணவர் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்க, சில சமூக விரோத அமைப்புகள் காத்துக் கொண்டிருந்தன.
எனவே, தேசத்தின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நமது மாணவர்கள் சட்டச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் தங்கள் படிப்பிலும், எதிர்காலத்திலும், வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டுமென்ற நோக்கத்துடனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள். இதற்கு பெயர் தோல்வியல்ல, 'தார்மீகம்'.
இளைஞர்களின் குரலுக்கு நமது பாஜக தலைமையிலான மத்திய அரசு என்றுமே செவிசாய்க்கத் தவறுவதில்லை என்பதை உணர்த்தும் இந்நிகழ்வு, நமது நாட்டில் கருத்துரிமையும், அடிப்படை சுதந்திரமும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சான்று'. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

