சிவாஜி கணேசனின் மூத்த மகளும் தயாரிப்பாளருமான சாந்தி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இராங்கல் தெரிவித்துவருகின்றனர்.
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, 'கலைஞரும் - நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் கரையாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்திருக்கிறது. அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அன்பு பாராட்டி வந்த சகோதரி சாந்தியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் திரு. நாராயணசாமி, மகள்கள் திருமிகு. விஜி லட்சுமி, திருமிகு. சத்யவதி, சகோதரர்கள் திரு. ராம்குமார், திரு. பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்து கூறியிருப்பதாவது, 'சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைந்தேன். அவர்பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவரது மறைவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்புச் சகோதரி சாந்தி நாராயணசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியிருப்பதாவது, 'சிவாஜி கணேசன் அவர்களின் அன்பு மகள், சாந்தி அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது சகோதரர்கள், அண்ணன் திரு. ராம்குமார், அண்ணன் திரு. பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமதி. சாந்தி அவர்களது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.' என்றார்.

