மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து இன்று வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, 'கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்' என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.
இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது'! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

