அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை ஆன்-லைனில் நடத்த திட்டம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.
பிரத்யேக மையங்கள் அமைத்து அதன் மூலம் எந்த தவறுகளும் நடக்காத வகையில் தேர்வு நடத்தப்படும் என்றும் உறுதி அளித்து உள்ளார்.

ஜூன் 21ல் நீட் மறு தேர்வு
இதுகுறித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
NEET - UG தேர்வுக்கான புதிய தேதியை NTA அறிவித்து உள்ளது. இந்த மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவர்களும் அவர்களின் எதிர்காலமுமே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை. மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகள் மீது அரசு எப்போதும் மிகுந்த அக்கறை, உணர்வுப்பூர்வமாகவும் உள்ளது.

நீட் தேர்வு - மே 03ல் என்ன நடந்தது?
நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெற்றது. மே 7ம் தேதிக்குள் 'ஊகத் தாள்கள்' guess papers என்று கூறப்படுவதில், இடம்பெற்றிருந்த சில கேள்விகள், இந்த ஆண்டின் கேள்வித்தாளிலும் இடம்பெற்றிருந்ததாக NTAன் குறைதீர்க்கும் அமைப்பு வாயிலாகப் புகார்கள் வந்தன. இதுகுறித்து, உடனே ஆலோசனை நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை, அரசு, உயர்கல்வித்துறை இணைந்து ஒரு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கின.

2,3 மாநிலங்களுடன் தொடர்புடைய...
இது, இரண்டு, மூன்று மாநிலங்களுடன் தொடர்புடையதாகத் தோன்றியதால், அந்தந்த மாநில விசாரணை முகமைகளுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த விசாரணை மே 7ஆம் தேதி இரவு முதல் முழுவீச்சில் தொடங்கியது. மே 8 முதல் தொடர்ந்து நடைபெற்றது. நான்கு நாட்களுக்குள், 'ஊகத் தாள்கள்' என்ற போர்வையில் கேள்விகள் கசிந்துள்ளன என்பது தெளிவானது. இது உறுதியானதும், மாணவர்களின் நலன் கருதி மே 12ஆம் தேதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்களின் உரிமை
கல்வித்துறையில் செயல்படும் மாஃபியா கும்பல்களின் சதி அல்லது தகுதியற்ற ஒரு நபர் முறையற்ற வழிகள் மூலம் பயனடைவதாலோ, தகுதியுள்ள எந்தவொரு மாணவரும் தங்கள் உரிமையை இழந்துவிடக்கூடாது. முறைகேடு தொடர்பாக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படும். மாஃபியாக்கள், சமூக விரோத சக்திகளுக்கு எதிரான நீண்ட போராட்டமாக இது அமையும். சமூக ஊடகம் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. மறுதேர்வு நடைமுறையை சீர்குலைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுகிறது.

சிபிஐ வசம் விசாரணை
இந்த விவகாரம், சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவோருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். வரவிருக்கும் தேர்வு நடைமுறையில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

மாணவர்கள் கவனத்திற்கு...
எவ்வித அச்சமும் இன்றி மாணவர்கள் தேர்வு எழுத வர வேண்டும். அரசு எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக துணை நிற்கும். தகுதிவாய்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எந்தவொரு மாஃபியா சதித் திட்டமோ அல்லது பண பலமோ உங்கள் கல்விக்கான இடத்தை அபகரித்துச் செல்வதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுத்திக் கூற விரும்புகிறேன். அதனால்தான் இத்தகைய ஒரு கடுமையான முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. மாணவர்களின் நம்பிக்கைதான் எங்களுக்கு மிக மிக முக்கியம்.

எவரும் தப்பமுடியாது
சிபிஐ மிகச் சரியாகவே கூறியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட எவரும் தப்ப முடியாது. குற்றத்தில் ஈடுபட்ட எவரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. கணினி வழித் தேர்வு ஒப்பீட்டளவில் OMR முறையை விட சிறந்தது. இணைய குற்றங்கள் மிகப் பெரிய தனி உலகமாகவே உருவெடுத்துள்ளன. இதில் சவால்கள் இருந்தாலும் நாம் நமது நாட்டின் அமைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

கணினி வழித்தேர்வு
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அடுத்த ஆண்டில் இருந்து இந்த விவகாரத்தின் மூல காரணமே களையப்படும். NEET தேர்வு, OMR முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கணினி வழித் தேர்வாக CBT நடத்தப்படும்.
இவ்வாறு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
Related Link

மருத்துவ படிப்புகளுக்கான மறு தேர்வு ஜூன் 21ல் நடக்கும் என அறிவிப்பு

