கேரளத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

காங். கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது
மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 98 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் தனித்து 63 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 35 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

35 இடங்களில் மட்டுமே வெற்றி
அதேசமயம், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 26 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 9 இடங்களிலும் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. மாநிலத்தில் முதல்முறையாக பாஜக 3 இடங்களில் வெற்றியை பதிவு செய்ய, 4 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் தடம் பதித்த பாஜக
கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல்முறையாக 3 இடங்களில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. நேமம், கழக்கூட்டம், சாதன்னூர் தொகுதிகளில் ராஜீவ் சந்திரசேகர், வி.முரளிதரன், பி.பி.கோபகுமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், 2016 தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற சாதனையை முறியடித்து, மாநிலத்தில் அக்கட்சி தடத்தை பதித்துள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய தொடக்கம் என்று, கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்
சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா செய்தார். கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, கேரளத்தில் 2 முறை தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்த பினராயி விஜயன், தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து, முதலமைச்சரின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
Related Link

ஆட்சியை தக்க வைத்த என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி

