விஜய் உள்ளிட்ட பல நடிகர்களை உருவாக்கிய பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணம் அடைந்தார். ராஜஸ்தானில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், உயிர் பிரிந்தது.
பிரபல சினிமா தயாரிப்பாளர்
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் , திரை உலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 74 வயதான ஆர்.பி. சௌத்ரி, தனது சொந்த ஊரான உதய்பூருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

புது வசந்தம் முதல்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவரான இவர், புதுவசந்தம், நாட்டாமை, பூவே உனக்காக , திருப்பாச்சி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து உள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்துள்ள ஆர்.பி.சௌத்ரி வாகன விபத்தில் காலமானார். இந்த நிலையில், ஆர்.பி. சௌத்ரின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரைத் துறையினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக 'மாரீசன்' படம் வெளியானது.

திரையுலகில் சோகம்
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களை தயாரித்து, ஆளுமையாக உருவெடுத்த ஆர்.பி சௌத்ரி மறைவுற்ற செய்தி, ஒட்டுமொத்த கோலிவுட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படங்களை தயாரித்து தனது நிறுவனத்தின் பெயருக்கு பெருமை சேர்த்த ஆர்.பி சௌத்ரி மறைவுற்றிருக்கும் நேரத்தில், திரை நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திருப்புமுனை தந்த பூவே உனக்காக...
69 படங்களில் நடித்து, தனது உச்சத்தில் இருக்கும்போதே அதை உதறிவிட்டு கட்சி தொடங்கிய விஜய்க்கு, திரை வாழ்க்கையில் முதல் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தவர் தான் ஆர்.பி சௌத்ரி. 1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் உருவான 'பூவே உனக்காக' படம் தான் விஜய்யின் தொடக்க கால திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்தது.
லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா படங்களை தயாரித்தார் ஆர்.பி சௌத்ரி. இந்த படங்கள் அனைத்துமே விஜய்யின் திரை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களாக அமைந்தன.

குடும்பங்கள் கொண்டாடும்...
1949ஆம் ஆண்டு பிறந்த ஆர்.பி.சௌத்ரி, 1988ஆம் ஆண்டு சூப்பர் குட் ஃப்லிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, மலையாளத்தில் அதிபாபம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். ஆர்.பி சௌத்ரியின் மகனான ஜீவா, விஜய்யின் நண்பன் படத்தில் அவரோடு இணைந்து நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்த் திரையுலகில் 'புது வசந்தம்' படம் மூலம் முதல் திரைப்படத்தை தயாரித்தவர், தென்னிந்திய மொழிகளில் பல படங்களை தயாரித்து மாபெரும் திரை ஆளுமையாக உருவெடுத்தார்.

திரையுலகினர் சோகம்
2010 வரை மாபெரும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய ஆர்.பி சௌத்ரி, குடும்பங்கள் கொண்டாடும் ஏராளமான கமர்ஷியல் படங்களை தயாரித்தார். பல மொழிகளில் சுமார் 99 படங்களை தயாரித்தவர், 100வது படத்தை தயாரிக்கும் முன்னே ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சாலை விபத்தில் மரணித்திருப்பது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

