Dailyhunt
சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு | வரவேற்புதான் ஆனாலும் கேள்வி எழுப்பும் மு.க.ஸ்டாலின், ராகுல்!

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு | வரவேற்புதான் ஆனாலும் கேள்வி எழுப்பும் மு.க.ஸ்டாலின், ராகுல்!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். "இது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார். இதை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளபோதிலும், இதுதொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளன.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இதனை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மத்திய அரசு நடத்த வேண்டும். இதற்கு கால நிர்ணயம் செய்யவேண்டியது அவசியம். அதாவது, எப்போது சாதிக் கணக்கெடுப்பு தொடங்கி முடிக்கப்படும் என்பதை அறிவிக்க வேண்டும். இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாட்டிலுள்ள 90 சதவீதம் மக்கள் அதிகார பலத்தை பெறுவார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும்படி பலமுறை பாஜக அரசிடம் நாங்கள் கேட்டுள்ளோம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு தற்போது பணிந்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம்.11 ஆண்டுகளுக்குப் பின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 4 சாதிகளே இருப்பதாக கூறி வந்த மோடியின் அறிவிப்பிற்குப் பின்னால் என்ன உள்ளது என தெரியவில்லை. பல முக்கிய கேள்விகளுக்கு விடையில்லை.சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும். 50% உச்சவரம்பை நீக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

சர்ப்ரைஸ் செய்தி!! சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

"சாதிவாரி கணக்கெடுப்பு திமுக மற்றும் I-N-D-I-A கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "சாதிவாரி, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், "மிகவும் அவசியமான சாதி கணக்கெடுப்பை மறுத்து தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், மத்திய பாஜக அரசு இறுதியாக வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்? நேரம் தற்செயலானது அல்ல. பீகார் தேர்தல் கதையில் சமூகநீதி ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்த திடீர் நடவடிக்கை அரசியல் நோக்கத்திற்காக என்கிற வாடை வீசுகிறது.

ஒருகாலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக குற்றம்சாட்டிய அதே பிரதமர், இப்போது அவர் மீண்டும் மீண்டும் அவதூறு செய்த கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார். புறநிலை கொள்கை வகுத்தல், இலக்கு வைக்கப்பட்ட நலன் மற்றும் உண்மையான சமூக நீதியைப் பின்தொடர்வதற்கு சாதி கணக்கெடுப்பு அவசியம் - விருப்பத்திற்குரியது அல்ல.

அநீதியை முதலில் அதன் அளவை அங்கீகரிக்காமல் சரிசெய்ய முடியாது. தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது ஒரு கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி. சாதி கணக்கெடுப்பு கோரி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றியவர்கள் நாங்கள். இந்த நோக்கத்தை ஒவ்வொரு மன்றத்திலும் நாங்கள் வலியுறுத்தினோம். பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், பல கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம். மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம். மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு யூனியன் பாடமாகும். மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட சாதி கணக்கெடுப்பை வழங்க முடியும், வழங்க வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிட மாதிரியின் கொள்கைகளால் இயக்கப்படும் எங்கள் கடினமான சமூக நீதிப் பயணத்தில் திமுக மற்றும் I-N-D-I-A கூட்டணிக்கு மற்றொரு வெற்றி" என அதில் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு | "வரலாற்று சிறப்பு மிக்க முடிவு; மாநில அரசும்.." - அன்புமணி இராமதாஸ் அறிக்கை
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai