Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உலகமே உற்றுநோக்கிய எதிர்பார்ப்பு.. ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு.. பேசியது என்ன?

உலகமே உற்றுநோக்கிய எதிர்பார்ப்பு.. ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு.. பேசியது என்ன?

மெரிக்கா- இஸ்ரேல் - ஈரான் இடையே நீடித்து வரும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனா அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்கா- இஸ்ரேல் - ஈரான் இடையே நீடித்து வரும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 3 நாள் அரசுமுறை பயணமாக சீனாவுக்குச் சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கத் தலைவரின் பயணம் இப்போதுதான் நிகழ்ந்துள்ளது. இதனால் இரு தலைவர்களின் இந்தச் சந்திப்பை உலகமே எதிர்நோக்கி வருகிறது. இந்த நிலையில், பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங், அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார்.

 டொனால்டு ட்ரம்ப், ஜின்பிங்

சந்திப்புக்குப் பிறகு பேசிய ஜின்பிங், "உலகம் முழுவதும் நம்முடைய இந்தச் சந்திப்பு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. தற்போது, கடந்த ஒரு நூற்றாண்டில் காணப்படாத பெரும் மாற்றம் உலகம் முழுவதும் அதிவேகமாக நிகழ்ந்து வருகிறது. மேலும் சர்வதேச சூழல் நிலையற்றதாக காணப்படுகிறது. உலகம் ஒரு புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது. நம் இரு நாட்டு மக்களின் நலன் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நம் இருதரப்பு உறவுகளுக்கு ஒரு பொன்னான எதிர்காலத்தை நாம் இணைந்து கட்டமைக்க வேண்டும். அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகள் போட்டியாளர்களாக இல்லாமல் நட்பு நாடாக இருக்க வேண்டும்" என்றார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "நாம் இணைந்து ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கப் போகிறோம். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு, முன்னெப்போதையும்விடச் சிறப்பாக அமையப்போகிறது. சீனா மீதும், நீங்கள் ஆற்றியுள்ள பணிகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நீங்கள் ஒரு சிறந்த தலைவர். இதை நான் அனைவரிடமும் கூறி வருகிறேன்.

 டொனால்டு ட்ரம்ப், ஜின்பிங்

சில சமயங்களில் நான் இவ்வாறு கூறுவதை மற்றவர்கள் விரும்புவதில்லை; இருப்பினும், நான் அதைத் தொடர்ந்து கூறி வருகிறேன். உங்களுக்கும் சீனாவிற்கும் மரியாதை செலுத்தும் விதமாக இங்கு வருகை தந்துள்ளேன். ஈரானுடனான பதற்றத்தைத் தணிக்கவும் தூதரக ரீதியிலான உடன்பாடு ஏற்படவும் சீனா உதவ வேண்டும்" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai